முந்தனையாறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உறுகாமம் கித்துள் இணைப்பினூடாக அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத் திட்டத்தினை பார்வையிட பிரான்ஸ் குடியரசின் தூதுவர் எரிக் லவேர்ட்டு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தின் கொள்ளவினை 90 எம்.சீ.எம். ஆக உயர்துவதற்கான கோரக்கைகளும் அதனால் பெற்றுக்ககொள்ளப்படவிருக்கும் நன்மைகள் பற்றியும் பிரான்ஸ் நட்டு தூதுவருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனால் தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்வபிவிருத்தித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ள இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டு தூதுவர், அங்கு பிரசன்னமாயிருந்த விவசாயிகள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளையும் சந்தித்தார்.
இதன்போது பிரான்ஸ் நாட்டு தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந் நீர்த் தேக்கத்தினை முழுமையாக 90எம்.சீ.எம். கணவளவுள்ளதாக அமைப்பது அல்லது 90 எம்.சீ.எம். -க்கான அத்திவாரத்தினை இட்டு 58 எம்.சீ.எம். கொள்ளவான அணைக்கட்டை அமைத்தல் அல்லது முழுவதும் 58 எம்.சீ.எம். ஆன நீர்த்தேக்கத்தினை அமைத்தல் என்ற மூன்று கருத்துக்களில் எதனை பிரான்ஸ் நாட்டு அரசு, இலங்கை அரசு நிதி வழங்குனர்கள் மற்றும் துறைசார் நிபுனர்கள் ஆதரிக்கின்றார்களோ அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.