முதல் இடத்தில் இருந்த தமிழைக் கண்டு கொதிப்படைந்த ஸ்ரீலங்கா அமைச்சர்! தமிழர் பகுதிக்கு ஏற்பட்ட நிலை

வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையம் கடந்த சனிக்கிழமை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார்.

குறித்த பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பெயர்ப் பலகையை கழற்றிவிட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,

“மன்னாரிலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ கடந்த 18ஆம் திகதி திறந்துவைத்தார்.

இதன்போது – திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது. இதனைக்கண்டு கொதிப்படைந்த விமல் வீரவன்ஸ, குறித்த பெயர்ப் பலகையை உடன் நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு பனை அபிவிருத்திச் சபையின் தலைவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இதன்படி தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அவரின் இந்த குரோதச்செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம்.

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகமொழியாக தமிழை பயன்படுத்துவதற்கும் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விரு மாகாணங்களிலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்புடைய நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளைக்கூட கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பறிக்க முற்படுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைபோட்டவர்கள் தற்போது தமிழ் மொழியில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் தடை போடுகின்றனர்.

இன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்போன்ற அரசியல்வாதிகள்தான் நாட்டில் இனவாதத்துக்கு தூபமிட்டு இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.