மீனவர் உயிர் பறிக்கும் செயலை ஏற்க முடியாது – 4 மீனவர் மரணத்துக்கு சுமந்திரன் கண்டனம்

இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியதால் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வரினதும் உயிரிழப்புக்கும் வன்மையான கண்டனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடல் எல்லைப்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு ட்ரோலர் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்கு மாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்து மாறும் நாம் தொடர்ந்தும் கோரும் அதேநேரம் வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர் பறிக்கும் செயலை ஏற்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள் கின்றோம்.

கடந்த 18ஆம் திகதி இரவு காணாமல்போன இந்திய மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியிருக்கலாம் என்ற சந்தேகமும், காணாமல்போன இந்திய மீனவர் படகில் இருந்த மீனவர்கள் நால்வருக்கும் என்ன நடந்தது என்ற அச்சமும் 18ஆம் திகதி இரவு 11 மணி முதலே நிலவிய வேளை நேற்று மாலை இருவரினது சடலங்களும், இன்று மற்றைய இருவரினது சடலங்களும் இலங்கைக் கடற் படையினரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட நால்வருக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிக்கும் அதேநேரம் இந்தச்சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறியவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இதேநேரம் உயிரைக் காக்க இந்தியாவுக்குத் தப்பியோடிய யாழ்ப்பாணம் இளைஞர் ஒரு வரும் தனது வாழ்வாதாரத்தைக் கருதி இந்திய உறவுகளுடன் தொழிலுக்கு வந்த வேளை பரிதாபமாக உயிரிழந்தமை எமது உறவுகளின் அவலத்தை எடுத்தியம்புகின்றது.

உறவுகளை இழந்து தவிக்கும் தாய்த் தமிழகச் சொந்தங்க ளுக்கும் எமது மீனவரின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.