மியான்மரில் இராணுவ ஆட்சி: நாடு திரும்ப அஞ்சும் ரோஹிங்கியா அகதிகள்

“மியான்மர் இராணுவம் எங்களது மக்களைக் கொன்றது, எங்கள் சகோதரிகள், தாய்மார்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது, எங்களது கிராமங்களைத் தீக்கரையாக்கியது.
அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்வது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கிய இளையோர் சங்கத்தின் தலைவர் கின் மவுங்.
மியான்மர் அரசை கடந்த திங்கட்கிழமையன்று அந்நாட்டு இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலையையும் இராணுவம் அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு  இராணுவக் கட்டுப்பாட்டில் அந்நாடு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே மியான்மரில் மேற்கொள்ளப்பட்ட ரோஹிங்கிய மக்கள் மீதான தாக்குதல்களில் இருந்து தப்பி வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் மீண்டும் மியான்மருக்கு செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் மியான்மரில் தற்போது வரையில் வசித்து வரும் ரோஹிங்கிய மக்களும் தமது எதிர்காலம் குறித்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.