மியன்மார் நிலைமை நாளை இங்கேயும் வந்துவிடக்கூடாது – கரு ஜயசூரிய எச்சரிக்கை

மியன்மாரின் ஜனநாயக விரோதஇராணுவ அடக்கு முறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைக்கும் வந்து விடக்கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாணசபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன. சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரமொன்று இயங்கிக்கொண்டுள்ளது. அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்க கூடாது. நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த கூடாது. இது நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்கு உற்படுதும். 20 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றிய சிலருக்குத்தான் இன்று மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக குரல் எழுப்ப வேண்டும்.

20 ஆவது திருத்தம் இந்த நாட்டுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒன்றாகும். அதனை ஏன் உருவாக்கினர் என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. இன்று சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழ ஆரம்பித்துள்ளது. இன்று அரசாங்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலைப்பாடுகள் எழுந்துள்ளன. யாரை நம்புவது, யார் உண்மையானவர்கள் என தெரியாத நிலைமை காணப்படுகின்றது. எனவே மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும்” என்றார்.