மாவீரர் வாரம் 4ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************

இந்த நொடியில் சாவது தெரிய
இதயத்தில் என்ன எண்ணத் தோன்றும்
காந்தரூபனின் ஆசையைக் கேட்டுக்
கட்டிய இல்லங்கள் இருந்தது அன்று
ஆரும் இல்லை என்று சொல்ல
ஆருமே அப்போ இருக்கவே இல்லை
அதுக்குப் பெயர்தான் ஈழம் என்றோம்
காத்தவர் எல்லாம் கடவுள் என்றோம்
நாலாம் நாளினில் நினைத்துப் பார்க்க….

சாவதை நோக்கிப் பாயும் போதும்
எமக்காய்த் துடித்த இதயங்கள் ஆச்சே
எப்படி மறப்பது அவர்களை என்று
எதிரிக்குக் கூட நன்றாய்த் தெரியும்
அதனால் தானே அவனும் இப்போ
அவர்களை நினைத்து வழக்குப் போட்டான்
தடையென எமக்குக் குறுக்கே நின்றான்
நெஞ்சில் அவர்களின் கனவுகள் சுமந்து
செயலினில் காட்ட உறுதி எடுப்போம்

அடிமை என்பதை அழிக்க வேண்டும்
வறுமை என்பது வேண்டாம் நமக்கு
அனாதை என்று யாருமே இல்லாத்
தேசம் தானே அவர்களின் கனவு
காந்தரூபன் கண்ட கனவை
நெஞ்சில் ஏற்று தீபமாய் இன்று
அறிவுச்சோலை செஞ்சோலை
மூத்தோர் இருக்கக் காப்பகம் என்று….

இருந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து
காப்போம் இப்போ அவர்களின் கனவை
ஈழத்தாயின் பிள்ளைகள் யாரும்
ஆருமே இல்லை என்று சொல்வதா…?
அரசியல் சாக்கடை சுத்தம் செய்து
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும்
நினைவில் நிற்பவர் கோயில் வேண்டும்
கரங்களைச் சேர்த்து உறுதி எடுப்போம்

றோய்