மாலைதீவில் இந்திய இராணுவம் நிலைகொள்ளும் – உடன்பாடு கைச்சாத்து

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் பூகோள அரசியல் நெருக்கடியின் அடுத்த நகர்வாக மாலைதீவில் இந்தியப் படையினரை நிலைநிறுத்தும் உடன்பாடு ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் நாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெயசங்கர் அங்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 வருடங்கள் காலஎல்லை கொண்ட இந்த உடன்பாட்டில் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் உசா மரியா அகமட் டிடி கைச்சாத்திட்டுள்ளார். இதன்போது இந்தியா 50 மில்லியன் டொலர்கள் உதவியையும் வழங்கியிருந்தது.

இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மாலைதீவில் இந்திய படையினர் தங்கியிருக்கவும், ஆயுதங்களுடன் நடமாடவும் முடியும் என்பதுடன், மாலைதீவு படையினரை பலப்படுத்தி அவர்களை பராமரிக்கவும் முடியும்.

இந்திய படையினரின் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களும் சுதந்திரமாக நடமாடவும் கடல் கண்காணிப்பில் ஈடுபடவும் முடியும். இந்த நடவடிக்கைகளுக்காக உதுரு தலபல்கு என்ற தீவை மாலைதீவு வழங்கியுள்ளது.