மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு- வைகோ இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என ம.தி.மு.க  பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராக பணியாற்றிய பின்னர் தாயகம் திரும்பியதும் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

கீழ்வெண்மணிப் படுகொலைகள் நாட்டையே உலுக்கிய போது நேரில் அங்கு சென்று உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார். வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது வாச்சாத்தியில் பழங்குடி மக்களும்,பெண்களும் காவல்துறை வன்முறைக்கு உள்ளான நிகழ்வுகளை நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்திய பட்டியலின, பழங்குடியினர் ஆணையத்தில் வாதாடி நீதியை நிலைநாட்டப் போராடினார். தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் பெண்களும் மதசார்பின்மையும், பெண்ணுரிமை, சமூகம்- ஒரு மறு பார்வை உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி, சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராக இறுதி மூச்சு அடங்கும் வரையில் பொறுப்பிலிருந்து இயங்கிய மைதிலி சிவராமன் அவர்கள் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் பெண்ணுரிமை இயக்கத்திற்கும், சிபிஎம் கட்சித் தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.