மாணவ குழுக்களிடையே மோதலில் மாணவனின் கழுத்தில் வெட்டு.

க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற  ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால்  மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 2600 வரையான மாணவர்கள் கூட்டுறவாளர் மண்டபத்திற்கு செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மண்டபத்திற்குள் சுமார் 1200 மாணவர்கள் மாத்திரமே அமர்ந்திருக்க முடியும் இதனால் ஆரம்பத்திலேயே சில மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட தொடங்கியது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் சிலர் அடிதடியில் ஈடுபட்டனர். கதிரைகளாலும் பரஸ்பரம் தாக்கிகொண்டனர்.

பின்னர் மண்டப வளாகத்திலிருந்து வௌியேறிய மாணவர்கள் வீதியிலும் மோதிக்கொண்டனர். கையில் பொல்லுகளுடன் சில மாணவர்கள் அடிதடியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் போது ஒரு மாணவனின் கழுத்து சிறிய கத்தி ஒன்றினால் வெட்டுப்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு ஏற்பாட்டுக் குறைப்பாடும் இதற்கு காரணம் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்