Home செய்திகள் மாணவர்கள் கடத்திக் கொலை ; முன்னாள் கடற்படை தளபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு

மாணவர்கள் கடத்திக் கொலை ; முன்னாள் கடற்படை தளபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்  முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவை 16 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி. இன்று பெயரிட்டது.

வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சி.ஐ.டி. இவ்வாறு அவரை 16 ஆவது சந்தேக நபராக பெயரிட்டது.

இன்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைகளை இடையீட்டு மனுவூடாக சி.ஐ.டி.யால்  விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது. அதன்படி அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர்  நிசாந்த சில்வா,  வசந்த கரன்னாகொடவை இந்த விவகாரத்தில் 16 ஆவது சந்தேக நபராக  பெயரிட கோரினார்.

அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பிரகாரம்,  அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாரும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோரினார்.

சந்தேக நபராக வசந்த கரன்னாகொடவை பெயரிட அனுமதியளித்த நீதிவான்,  அவரை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியொருவர்‍ ஊடாக  மன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.