Tamil News
Home செய்திகள் மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?

மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா, கசிப்பு வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.

இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கும் சென்ற குறித்த மாணவனும் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்கள்  கொண்டு செல்லும்  பூ மாலை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. மாறாக வெளியில் உள்ள சுவாமிக்குத்தான் அணிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை. இவ்வாறு தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில்  பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது.

தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த  மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், மாணவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியதாக  பாதிக்கப்பட்ட  மாணவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது, ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் . அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர், இங்கு நிர்வாகம் எடுப்பதுதான் தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய
நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த
மாணவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன்.  அந்த மாணவனுடைய வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் குறித்த மாணவனைப் போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர, இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது
தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற
மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Exit mobile version