ஆகஸ்ட் 20 ஆம் நாள் உலக நுளம்புகள் தினம் என்பதால் இந்த பத்தியை நாம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.
மலேரியா நோய் தற்போதும் மிகப்பெரும் சமூக மற்றும் மருத்துவ சவாலாக உள்ளது. இது பிளாஸ்மோடியம் பரசைட் (Plasmodium parasites) எனப்படும் நுண்ணுயிரினால் ஏற்படும் உயிர் கொல்லும் நோயாகும்
இந்த கிருமிகளை கொண்ட நுளம்புகள் மனிதரை கடிப்பதனால் இந்த நோய் பரவுகின்றது. காச்சல், தலைவலி, குளிர்காச்சல், களைப்பு மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் இந்த நோய் தொற்றிய 7 தொடக்கம் 10 நாட்களில் தோன்றும். சிகிச்சை அளிக்கப்படாது விட்டால் மரணம் ஏற்படும். 2020 ஆம் ஆண்டு 241 மில்லியன் மக்கள் தொற்றுதலுக்கு உள்ளாகியதுடன் 627,000 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதிலும் ஆபிரிக்காவின் சகாரன் பிரந்தியமே அதிகம் பாதிக்கப்பட்டது. அங்கு 95 சதவிகித தொற்றுதல்கள் ஏற்பட்டதுடன், 96 சதவிகித மரணங்களும் நிகழ்ந்துள்ளன. அதிலும் 80 சதவிகிதமான மரணங்கள் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் நிகழ்ந்துள்ளது.
தடுப்பு முறைகளை இரு வழிகளில் மேற்கொள்ளலாம் ஒன்று தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்குவதன் ஊடாக நோய் பரவுவதை தடுக்கலாம். இரண்டாவது நுளம்பு வலைகள், நுளம்பின் இனப்பெருக்கத்தை தடுத்தல், நுளம்புகளை விரட்டும் சாதனங்களை பயன்படுத்துதல் மூலம் நுளம்புகள் மனிதர்களை கடிப்பதை தவிர்க்கலாம்.
ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகளை வழங்குவதன் மூலம் மலேரியா ஏனைய நாடுகளுக்கு பரவுவதை தடுக்கலாம். அது பல சந்தர்ப்பங்களில் வெற்றியளித்துள்ளது. Sulfadoxine-pyrimethamine plus amodiaquine போன்ற மருந்துகளை சேர்த்து பயன்படுத்துவதுண்டு. ஆனால் இந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுள்ள மலேரிய நுண்ணங்கிகளின் மரபணு மூலக்கூற்று பிறழ்வு சவாலாக அமைந்துவிடுகின்றது.
மனிதர்களின் உடலில் இந்த நுண்ணங்கிகள் பெருகுவதை தடுப்பதற்கான புதிய மருந்துகளை வடிவமைப்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். மலேரியா நுண்ணுயிர்களில் நான்கு வகைகள் உண்டு. Plasmodium falciparum என்ற வகையே மிகவும் ஆபத்தானது. அதுவே ஆபரிக்க நாடுகளில் அதிக மரணத்தை ஏற்படுத்துகின்றது.
Anopheles mosquito என்ற பெண்நுளம்பே மனிதர்களில் இந்த நோயை பரப்புகின்றது. நோய்கிருமிகள் (sporozoites) மனிதர்களின் உடலை அடைந்ததும் அவை ஈரலுக்கு சென்று பல மடங்காக பெருகுகின்றன (merozoites). பின்னர் இந்த கிருமிகள் செங்குருதிக்கலங்களை அடைந்து அவற்றை சேதப்படுத்துகின்றன. குருதிக்கலங்கள் அழிவடையும்போது தான் மனிதர்களில் நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்தில் குணப்படுத்தாதுவிட்டால் மரணம் ஏற்படும்.
புதிய தலைமுறை மருந்துகள் இந்த நோயை ஆரம்பத்தில் அழிப்பதாக இருத்தல் வேண்டும். அதாவது ஈரலில் வைத்து கிருமிகளை அழித்துவிட்டால் அவை குருதிக்கு பரவி நுளம்புகள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை தடுக்கலாம்.
மருந்துகளை பரிசோதனை செய்யும்போது அவற்றை முதலில் ஆய்வுகூடங்களில் உள்ள விலங்ககளின் கலங்களில் பின்னர் விலங்குகளில் பரிசோதிப்பதுண்டு. ஈரலில் நோய்கிருமிகள் பெருகுவதற்கு 7 நாட்கள் எடுக்கின்றன. எனவே அவற்றை அங்கு வைத்து அழிப்பது சவாலான விடையம். சில மருந்துகள் நல்ல பலனை தருகின்றன. ஆனால் மருந்துகள் வடிவமைக்கப்படும் போது பின்பற்றப்படும் வழமையான இருபரிமான வடிவமைப்பை விட முப்பரிமான வடிவமைப்பே எதிர்காலத்தில் தேவையாக உள்ளது.
இந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள மருந்து தற்போது இரண்டாவது சுற்று (Phase II study) பரிசோதனையில் உள்ளது. முதலாவது சுற்று பரிசோதனையில் மனிதர்கள் பயன்படுத்தப்படுவதையும் இந்த புதிய வடிவமைப்பு குறைத்துள்ளது என தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு பிரிவின் தலைவர் Claude Oeuvray. இந்த புதிய அணுகுமுறை மிகப்பெரும் வெற்றியை கொடுக்க கூடியது. ஈரலில் வைத்து மலேரியா நுண்ணுயிர்களை அழிப்பது என்பது உயிரிழப்புக்களை வெகுவாக குறைப்பதுடன் இந்த நோயை முற்றாக அழிக்கவும் உதவும்.
இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவான உயிர்களை காப்பாற்றுவதுடன், இந்த நோயினால் ஏற்படும் பொருளாதார செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும்.