Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பியனுப்புகிறது...

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பியனுப்புகிறது அந்தநாடு

பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மலேசியா உருவாவதைத் தடுக்க, மறுசுழற்சி செய்ய முடியாத 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக மலேசியா சுற்றுச்சூழல் அமைச்சர் யோ பீ இன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து கடந்த 2013-14ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு சட்ட விரோதமாக பிலிப்பைன்சில் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் மீண்டும் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டி கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் யோ பீ இன் வெளிநாடுகளில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அந்நாடுகளுக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய கடந்தாண்டு சீனா தடை விதித்தது முதல், மலேசியா போன்ற வளரும் நாடுகளை குறிவைத்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கோலாலம்பூர் துறைமுகத்திற்கு 10 கண்டெய்னர்களில் வந்தன. அவற்றில் இங்கிலாந்து கேபிள்கள், காலாவதியான ஆஸ்திரேலியா பால் பவுடர்கள், வங்கதேச சிடிக்கள், அமெரிக்கா, கனடா, ஜப்பான், சவுதி அரேபியா, சீனாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் கழிவுகள் இருந்தன. மறுசுழற்சி செய்ய முடியாத இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும்.

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல. இதனை எதிர்த்து போரிடுவோம். சிறிய நாடாக இருப்பதனால் வளர்ச்சியடைந்த நாடுகள் எங்களை உதாசீனப்படுத்த அனுமதிக்க மாட்டோம். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு சீன தடை விதித்திருப்பது உலக நாடுகளின் கண்களை திறந்துள்ளது. இதனால் நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்ட 150 பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இம்மாத தொடக்கத்தில் 5 கண்டெய்னர் கழிவுகள் ஸ்பெயினுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் தங்களது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து மறுஆய்வு செய்து, வளரும் நாடுகளை தங்களது குப்பைத் தொட்டியாக கருதி கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன். அப்படி ஏற்றுமதி செய்வது நியாயமற்றது; அநாகரீகமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version