மலேசியாவில் 82,341 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று அமலுக்கு வந்துள்ளது. வரும் 14ஆம் திகதி வரை இந்த முழு முடக்கநிலை உத்தரவு அமலில் இருக்கும்.

அண்மைய சில தினங்களாக மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

“மலேசியாவில் நான்கு வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237குழந்தைகளும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 26,851 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 27,402 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அமைச்சர் ஆதம் பாபா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்ததோடு, எனினும் இவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.