மருத்துவமனை முழுவதும்  கொரோனா நோயாளர்கள்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் , 90% மருத்துவமனை படுக்கைகள் கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன மேலும் 10% படுக்கைகள் மட்டுமே ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கவுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பாரிய முயற்சிக்குப் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அவசர சிகிச்சை படுக்கைகளின் தேவையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இருப்பினும் அவசர சிகிச்சை படுக்கைகளில் 50% க்கும் அதிகமானவை ஏற்கனவே கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரான  மருத்துவர்  பிரசாத் கொலம்பேகே தெரிவித்துள்ளார்.

மேலும் “கொரோனா வைரஸிற்கான மருத்துவமனை சிகிச்சைக்கு ஏற்ப தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி வழங்குதல் தொடர்பான சில சிக்கல்கள் உள்ளன, மேலும் சமீபத்திய நாட்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது மெதுவாக முன்னெடுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும், ஆனால் முதல் செலுத்துகையை பெற்றவர்களுக்கு தங்கள் இரண்டாவது செலுத்துகையை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சில நபர்கள் இரண்டாவது செலுத்துகையை பெறுவதற்கான கால அளவைத் தாண்டிவிட்டனர்.

எனவே வைரஸ் பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்காக சரியான நேரத்தில் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது” என மருத்துவர்  பிரசாத் கொலம்பேகே மேலும்  தெரிவித்துள்ளார்.