Tamil News
Home செய்திகள் மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆகியது – நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆகியது – நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி

மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஐந்து பேருக்குத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுன்னாகம் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 110 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே ஐந்து பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 108 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி ஓட்டோ தரிப்பிடத்திலுள்ள சாரதிகளிடம் கடந்த 9ஆம் திகதி மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் ஓட்டோ சாரதியாகவுமுள்ள 38 வயது குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த 11ஆம் திகதி கண்டறியப்பட்டது.அதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

மறுநாள் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், 6ஆவது நாளான நேற்று முன்தினம் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மேலும் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டநிலையில் மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version