மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றினால் 16 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் நேற்று கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 13 வீடுகள் பௌதீக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும்,முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளது.

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியில் ஒரு கடையும், கொக்குப்படையான் கிராமத்தில் ஒரு கடையும் சேதமடைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசிச் செய்கையும், தேவன் பிட்டி, வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.