மண்டபம் வழியாக மங்களூர் சென்ற இலங்கைத் தமிழருக்கு உதவிய மூவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கடல் வழியாக படகில் மங்களூரு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 14 பேருக்கு உதவிய மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த மூவரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து தமிழக கடல் வழியாக கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கையை சேர்ந்தவர்களை சிலர் சட்ட விரோதமாக படகில் அனுப்பி வருகின்றனர். இதற்காக நபருக்கு ரூ.5 இலட்சம் வரை முகவர்கள் பெறுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மண்டபம் மரைக்காயர் பட்டினம் கடல் வழியாக வந்த 14 பேர், துாத்துக்குடி வழியாக வந்த 20 பேர் என 34 பேரை மங்களூரில் வைத்து காவல்துறையினர்  கைது செய்தனர்.

இதே போல் கன்னியாகுமரி வழியாக வந்த 18 பேரை மதுரையில் கைது செய்தனர். இவர்களிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மண்டபம் மரைக்காயர் பட்டினம் வழியாக மங்களூர் செல்ல உதவிய மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த அப்துல் முகைதீன் 43, ரசூல் 29, சதாம் 31, ஆகிய மூவரை சென்னை கியூ பிரிவு மாவட்டக் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் மரைக்காயர் பட்டினத்தில் கைது செய்தனர்.