மட்டக்களப்பை வந்தடைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம்’

பல்வேறு தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று  மாலை மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு  காவல்துறையினர்,விசேட அதிரடிப்படையினர் நீதி மன்றத்தின் ஊடாக தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்த குறித்த போராட்டத்தில் அட்டாளைச் சேனையில் முஸ்லிம்களும் இணைந்து வலுச்சேர்ந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை  வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.