மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தை உயிரிழப்பு – முறையான விசாரணைக்கு கோரிக்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்னொருவரின் பிரசவத்தின்போது வைத்தியர்களின் கவலையீனம் காரணமாக குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு முகத்துவாரத்தினை சேர்ந்த 30வயதுடைய பெண்னொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக வழங்கப்பட்ட திகதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த பெண்னை சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பெறவேண்டும் என வைத்தியர்கள் கோரிய நிலையில் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களினால் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தை பிரசவிக்கப்பட்டபோதிலும் குழந்தையினை யாரிடமும் காட்டாமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகவும் குறித்த குழந்தையினை சத்திரசிகிச்சையின்போது வெளியில் எடுக்கும்போது கத்தரிக்கோலினால் வெட்டும்போது குறித்த காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும் தாதியர்களும் மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் குறித்த குழந்தையின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.

குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவசோதனைகளை மேற்கொண்டுவந்த நிலையிலும் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலும் சத்திரசிகிச்சையின்போது குழந்தை உயிரிழந்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.