மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பதென மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் கடந்த செவ்வாய் அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மணல் மற்றும் மண் உட்பட கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர், திணைக்களத் தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், “மணல் மற்றும் கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை பிரதேச செயலாளர்கள், பொலிசார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இவ்வாறு சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து பாதைகள் சேதமடைந்து காணப்படுவதால், பொது மக்கள் போக்குவரத்து செய்வது சிரமமாக உள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்தே 2020 பெப்ரவரி 1ஆம் திகதி வரை மணல் அகழ்வதை நிறுத்தி வைப்பது இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
imageproxy 1 மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது