மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலரினால் சுட்டுக் கொல்லப் பட்டவரின் சடலம் இன்று மாலை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் ஊறண மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தரமுடியுமா? கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பதாகைனை சடலம் தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பு,ஊறணி,மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நபரின் உடல் அவரது உறவினர்களிடம் பிரேத பரிசோதனையின் பின் கையளிக்கப்பட்டது. இதையடுத்து கொல்லப்பட்டவரின் இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து ஊர்வலமாக பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் சின்னஊறணி மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதே நேரம் சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.