மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடை முறைகளைப் பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார பிரிவினர் வழங்கிவரும் நிலையில் அவற்றினை உதாசீனம் செய்யும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இதனை கருத்திக்கொண்டு முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் இன்று அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உள்ள வங்கிகளில் கடமையாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பு அரசடி சந்தியில் இந்த பரிசோதனைகளை மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதி சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினரும் சுகாதார பிரிவினரும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினரும் சுகாதார பிரிவினரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வவுனியாவில் இந்த வருடத்தில் 8565 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதுவரை 450 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 528 பேர் வவுனியாவில் அமைந்துள்ள மூன்று தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 75 குடும்பங்களை சேர்ந்த 220பேர் சுயதனிமைப் படுத்தலிற்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
அதே நேரம் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக நேற்று வரை(27) 67 கோவிட்19 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மருத்துவர் வீ.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.