மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் 73வது நினைவு நாள் இந்தியாவில் நினைவு கூரப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் பல பாகங்களிலும் காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மகாத்மா காந்தியின் 73வது நினைவு நாளை குறிக்கும் வகையில் 73மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அதே போல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.
நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முதலவர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி புதுடில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே என்பவர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.