Tamil News
Home செய்திகள் பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது.இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை திருட்டுத் தனமாக பிரதமராக்கி அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார்.

இதனால் பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. அதிலும் முக்கியமாக இனப் பிரச்சினைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது.அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன.வேலை வாய்ப்பு,காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதமாகியுள்ளன. இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது.

எனினும் தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான் என்றார்.

Exit mobile version