Home ஆய்வுகள் போர்க்கைதிகளுடன் வந்த விமானம் சுடப்பட்டதா? – வேல்ஸில் இருந்து அருஸ்

போர்க்கைதிகளுடன் வந்த விமானம் சுடப்பட்டதா? – வேல்ஸில் இருந்து அருஸ்

ரஸ்யாவின் மிகப்பெரும் இராணுவ சரக்கு விமானங்களில்  ஒன்றான  IL-76 விமானம் (Heavy transport plane) கடந்த புதன்கிழமை காலை ரஸ்ய நேரப்படி 11 மணியளவில் உக்ரைனுக்கு அருகில் உள்ள எல்லைக் நகரமான Belgorod பகுதியில் வீழ்ந்து நெருங்கியதில் அதில் பயணம் செய்த 65 உக்ரைன் போர்க் கைதிகள், 6 விமானப்பணியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த பகுதியின் நகரபிதா வைசெஸ்லேவ் கிளட்கோவ் தெரிவித்துள்ளார்.

il 76 plane போர்க்கைதிகளுடன் வந்த விமானம் சுடப்பட்டதா? - வேல்ஸில் இருந்து அருஸ்இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஜப்லொனோவோ பகுதியில் இருந்தே இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் எஸ்-300 வானெதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்றி வந்ததாகவும், அதனை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதானவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கொள்காட்டி உக்ரைனின் பிரவ்டோ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் சில நிமிடங்களில் அந்த செய்தி அகற்றப்பட்டு விமானம் வீழ்ந்ததற்கும் உக்ரைன் படையினருக்கும் தொடர்புகள் இல்லை என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. இரண்டு விமானங்கள் போர்க்கைதிகளை கொண்டு சென்றதாகவும், முதலாவது விமானத்தில் 65 பேரும் இரண்டாவது விமானத்தில் 80 பேரும் இருந்ததாகவும் முதலாவது விமானம் வீழந்ததும் இரண்டாவது விமானம் தளத்திற்கு திரும்பிவிட்டதாக ரஸ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்றே கர்ட்டபோலோவ் தெரிவித்துள்ளார்.

கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் உக்ரைனுக்கு ஏற்கனவெ தெரியும், விமானங்களின் பயணப்பாதையம் அறிவிக்கப்பட்டிருந்தது. உக்ரைனின் தலைமைக்கு இது தெரியும் எனினும் விமானத்தின் மீது 3 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அமெரிக்க தயாரிப்பான பற்றியாட் அல்லது ஜேர்மனியின் தயாரிப்பான ஐ.ஆர்.ஐ.எஸ்-ரீ என்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன இது உக்ரைனின் திட்டமிட்ட செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமானம் வீழும் காணொளிகளும், விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. பரந்த தூரத்திற்கு விமானத்தின் பாகங்கள் வீழ்ந்து கிடப்பதை காணமுடிகின்றது.

மாலை வேளையில் கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஏவுகணைத்தாக்குதல் கார்கோவ் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏவுகணைகள் வானில் வெடித்ததற்கான அடையாளங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதை தமது ரடார்கள் பதிவு செய்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. விமானத்தின் மீது ஏதோ மோதியதாக விமானி தெரிவித்துள்ளார் என பாதுகாப்பு சபையின் தலைவர் விக்ரோர் பொன்டரேவ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் உக்ரைன் அரசின் உள்ளக பிரச்சனைகளின் உச்சக்கட்டமே இந்த தாக்குதல் என தெரிவித்துள்ளார் ரஸ்யாவின் தேசிய பாதுகாப்பு சபையின் பிரதித்த தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மிற்றி மெட்வெடேவ். கைதிகள் பரிமாற்றம் நடக்கஇருந்ததை உக்ரைனின் புலனாய்வுத்துறையின் தலைவர் உறுதிப்படுத்தியுமுள்ளார்.

ரஸ்யாவின் நடாளுமன்றம் இதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என விபரித்துள்ளது. விமானம் தாக்கப்படுவதற்கு முன்னர் அந்த பகுதியில் ஏவுகணை அபாய அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

தனது சொந்த படையினரை உக்ரைன் படுகொலை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டப்பட வேண்டும் எனவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லரோவ் தெரிவித்துள்ளார்.

அதேசயம் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பட்டியலையும் ரஸ்யா வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த பட்டியலில் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டவர்கள் உள்ளனர் என சமூகவலைத்தளங்களில் உக்ரைன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 ஆம் நாள் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டபோது இந்த விமானங்கள் மூலமே கைதிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அப்போதும் விமானத்தின் பயணப்பாதை உக்ரைனுக்கு தெரிவிக்கப்படதாவும் கூறப்படுகின்றது.

இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் வீழ்ந்து கிடக்கும் விமானத்தின் சிதறல்களில் ஏவுகணை வெடிக்கும் போது சிதறும் சன்னங்களினால் ஏற்பட்ட சேதங்களை காணமுடிகின்றது. மேலும் ஏவுகணை வானில் வெடித்ததற்கான அடையாளங்களும் உள்ளன.

தரையில் உள்ள சாட்சிகளும் வானத்தில் இரண்டு வெடிப்பதிர்வுகள் கேட்டதாக கூறுகின்றனர். அதன் பின்னர் விமானம் வீழ்ந்தபோது மூன்றாவது வெடிப்பதிர்வு கேட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரம்; தீப்பற்றியுள்ளதாகவும், விமானம் திடீரென கீழ் நோக்கி செல்வதாகவும் விமானி தனது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். தரையில் உள்ளவர்களும் விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்ததை பார்த்துள்ளனர்.

விமானம் தீ பிடித்ததும் அதனை கிராமத்தில் இருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு விமானிகள் திருப்பியதால் பெரும் உயிர் அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிக்கப்படுகின்றது.

உக்ரைனில் பெருமளவான வெளிநாட்டு படையினர் கூலிப்படைகளாக பணியாற்றி வருகின்றனர் பல பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  அவர்கள் உக்ரைனின் இழப்புக்களை விட ரஸ்யாவுக்கான இழப்பை தான் முதன்மையாக பார்ர்க்கின்றனர் கார்கோவ் பகுதியில் கடந்த வாரம் 60 பிரான்ஸ் படையினர் கொல்லப்பட்டதாக ரஸ்யா தெரிவித்திருந்தது.

தற்போது அந்த பகுதியில் இருந்து தான் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. அதாவது உக்ரைனின் படையினரின் உயிரையும் பாராமல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தனது நாட்டில் உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என உக்ரைன் தெரிவித்துள்ளபோதும் உக்ரைன் போரை இழந்து விட்டதையே இது காட்டுகின்றது.

Exit mobile version