போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட வெள்ளை பவுடர்- விவசாய உரம் எனத் தகவல்

இலங்கைக்கு   தண்ணீர் கேனில் அடைக்கப்பட்ட வெள்ளை பவுடரரை கடந்த முயன்ற குற்றச்சாட்டில்,  கடற்படை  காவல்துறையினரால் கீழக்கரை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்,  முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேதாளையில் தண்ணீர் கேனில் பிடிபட்ட வெள்ளை பவுடர் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடலோர பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் புதன் கிழமை மாலை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 28ஆம் திகதி இரவு 8 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத் தெருவைச் சேர்ந்த சர்பராஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகியோர் 25 லீட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கு இடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதைப்பொருளோ வெடி மருந்தோ இல்லையென்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேற்படி நபர்கள் விவசாய உரத்தை மிக அதிக பண மதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச் செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் மேற்படி நபர்கள் இருவரும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் சமையல் மஞ்சள், கஞ்சா, கடல் அட்டை, விவசாய உரம், கடல் குதிரை உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.