போட்டி அரசியலால் புதையும் சமூகம் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சமகால போக்குகள் திருப்தி தராத நிலையில், தோட்டங்களின் இருப்பு மற்றும் இம்மக்களின் அடையாளம் குறித்து அச்சமான சூழ்நிலை இப்போது மேலெழுந்திருக்கின்றது. இத்துறையைக் கொண்டு நடாத்துவதில் நிறுவனத்தினர் வெளிப்படுத்தும் பிடிவாத மற்றும் பொருத்தமற்ற கையாளுகைகள் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. இதேவேளை மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின், இம்மக்கள் குறித்த பாராமுகமும், இம்மக்களின் எழுச்சி குறித்த சிந்தனைகளை மழுங்கடித்திருக்கின்றன. இந்நிலையில், அரசியல் தொழிற்சங்க மாயைகளில் இருந்து விடுபட்டு கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் உருவெடுக்கும் பட்சத்திலேயே பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.                   

ஒரு சமூகத்தின் பல்துறை மேலெழும்புகை என்பது அவ்வளவு இலகுவாக சாத்தியப்படக் கூடிய ஒரு விடயமல்ல. சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினர்களினதும் அர்ப்பணிப்பு, விட்டுக் கொடுப்பு, ஆக்கபூர்வமான செயற்பாடுகள், முன்னெடுப்புக்கள் என்பன இந்நிலையை அடைவதற்கு வலு சேர்ப்பதாக உள்ளன. மலையக சமூகத்தைப் பொறுத்தவரையில், இது சற்று அதிகமாகவே தேவைப்படுகின்றது. சுமார் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட இச்சமூகம் வரலாறு குறித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர, வாழ்க்கை நிலைமைகளில் பெருமைப்பட முடியவில்லை. ஏனைய சமூகங்களின் வாழ்க்கை நிலைமைகளுடன் ஒப்பிடுமிடத்து இச்சமூகத்தில் வாழ்க்கை நிலைமைகள் மிகவும் பின்னடைவு கண்டுள்ளன என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமில்லை. வாக்குறுதிகளை வழங்கி இம்மக்களின் மனதை நிரப்புவதற்கு முயலும் ஆட்சியாளர்களும், மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளும் இம்மக்களின் நிலைமை உணர்ந்து அவர்களுக்கு சேவையாற்றுவதாக இல்லை. போட்டி அரசியலால் ஒரு சமூகம் புதைந்து கொண்டிருக்கின்றது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போன்று இச்சமூகத்தைச் சேர்ந்த சிலரே இச்சமூகத்தின் பின்னடைவுகளுக்கு உந்துசக்தியாக இருந்து வருகின்றமை வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விடயமாகும்.

a19 போட்டி அரசியலால் புதையும் சமூகம் -	துரைசாமி நடராஜா

 

மலையக மக்கள் இன்னும் பல்துறை சார்ந்த அபிவிருத்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த பயணம் அவசியமாகவுள்ளபோதும், நிலைமைகள் அவ்வாறு காணப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் இழுபறியாகி வருகின்ற நிலையில், உரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க திராணியற்றவர்களாக மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் மாறி இருக்கின்றார்கள். ஊடக அறிக்கைகளில் உயிர் வாழும் இவர்களில் பலர் சமூகத்தின் புல்லுருவிகளாக இருப்பது பலர் அறிந்த உண்மையாகும். சம்பள நிர்ணய சபையின் மூலமாக ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு, தொழிலாளர்களின் ஏனைய உரிமைகளை ஏப்பமிடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சில மலையக அரசியல்வாதிகள் இன்னும் பிள்ளைப் பூச்சியாகவே இருந்து வருகின்றனர். இது இச்சமூகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும். பாமர மக்கள் என்பதால் பல வழிகளிலும் இவர்கள் ஏமாற்றப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல.

நிறுவனங்களின் சமகால இழுபறி நிலையினால் பெருந்தோட்டங்கள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கைமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக தெரிய வருகின்றது. அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால், ஆயிரம் ரூபாய் கிடைக்கலாம். ஆயினும் எதிர்காலத்தில் தோட்டங்களில் மனிதவள மழுங்கடிப்பு ஏற்படக் கூடுமென்றும், தொழில்நுட்ப விருத்தி மற்றும் இலாபத்தை மையப்படுத்திய காய்நகர்த்தல்கள் என்பவற்றின் காரணமாக தொழிலாளர் உரிமைகள் மேலும் பாதிப்படையலாமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களின் இருப்பும், தொழிலாளர்களின் சமூக அடையாளங்களும் மென்மேலும் கேள்விக்குறியாகலாம். எனவேதான் தோட்டங்கள் நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பதே தொழிலாளர்களுக்கு நன்மை விளைவிப்பதாக அமையுமென்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  அரசாங்கம் சிலவேளை தோட்டங்களை பொறுப்பேற்குமாக இருந்தால், தொழிலாளர்களின் நிலைமைகள் மேலும் மோசமடையலாம். அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல வருமானக்குறைவால் மேலெழுந்துள்ள பசி, பட்டினி என்பவற்றின் மத்தியில் இம்மக்களின் சமூக வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகின்றது.

408999 10151405534409724 1283834777 n போட்டி அரசியலால் புதையும் சமூகம் -	துரைசாமி நடராஜா

கம்பனிகளின் பொறுப்பில் சமகாலத்தில் தோட்டங்கள் இருப்பதால் வெளியாரின் ஊடுருவல் குறைவாக உள்ளது. எனினும் இந்நிலை மாற்றமடையுமிடத்து வெளியாரின் ஊடுருவல் அதிகரிக்கும்; அதேவேளை தோட்டங்களை காடுகளாக்கி, நிலங்களை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கும் அரசின் நீண்டகால கனவும் நனவாகும். இத்தனை இருந்தும் மலையக அரசியல்வாதிகள் சிலர் இன்னும் பொறுப்பில்லாத நிலையிலேயே இருந்து வருகின்றமையையும் கூறியாக வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வெறுமனே சம்பளத்துடன் மட்டுமே முற்றுப் பெறவில்லை. இன்னும் பல பிரச்சினைகளும் அவர்களிடையே தொக்கி நிற்கின்றன. குடியிருப்பு, சமூக வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்பு என இன்னோரன்ன பிரச்சனைகளும் இதில் உள்ளடக்குகின்றன. ஒரு மனிதனின் அபிவிருத்தியைத் தீர்மானிப்பதில் வீடு மற்றும் அவன் வாழுகின்ற சூழல் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றன. இந்த நிலையில், மலையக மக்களின் வீட்டுச் சூழல் பல்துறை அபிவிருத்திக்கு ஏற்புடையதாக இல்லை. ஒற்றை லயன் குடியிருப்பு, இரட்டை லயன் குடியிருப்பு, தற்காலிக குடிசைகள் என்று இம்மக்களின் குடியிருப்பு நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அங்குமிங்குமாக சில தனி வீடுகள் அள்ளித் தெளித்தது போல் காணப்படுகின்றன. இவையும் இம்மக்களின் தனி வீட்டுக் கனவை உரியவாறு நனவாக்குவதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சமகால வீடமைப்பு இழுபறிகளுக்கு மத்தியில் தனிவீட்டுக் கனவை நனவாக்குவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லக் கூடும் என்று கருதப்படுகின்றது. இதேவேளை முறையான வீடமைப்பு திட்டமிடல் கொள்கை ஒன்று மலையக அரசியல்வாதிகளிடையே காணப்படவில்லை. அவ்வப்போது கூட்டத்தோடு கோவிந்தா போடும் நிலைமைகளே காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு தனியான வீடமைப்பு குறித்த திட்டமிடல் கொள்கை ஒன்றினை உருவாக்கி, இதனை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளுக்கு அப்பால் இவ்வாறு  ஐக்கியத்துடனான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

ஒவ்வொரு சமூகத்தினரும் இன்று தமது அடையாளத்தினையும், இருப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். தமது நிகழ்காலமும், எதிர்காலமும் இவற்றிலேயே தங்கி இருக்கின்றது என்பதனை இவர்கள் தெளிவாக உணர்ந்து, அதனை அடைந்து கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். மலையக சமூகத்தினர் இதனை ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும். மக்களை இவ்விடயத்தில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும் இருக்கின்றது. ஒரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தொழில் இல்லாத ஒருவருக்கு தொழில் வழங்கும் ஒரு செயற்பாடு அல்ல. அல்லது வெறுமனே நாற்காலிகளைச் சூடேற்றுகின்ற ஒரு சம்பிரதாயமும் அல்ல. அர்த்தபுஷ்டியான தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளால் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு வலு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மலையக அரசியல்வாதிக்கும் இருக்கின்றது. இதிலிருந்தும் இவர்கள் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் இன்று தடமிழந்திருக்கின்றன. காலி, மாத்தறை, களுத்துறை போன்ற பல இடங்களில் வசிக்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் பெயரளவில் மட்டுமே தமிழர்களாக இருந்து வருகின்றனர். சிந்தனைகள், செயற்பாடுகள், கலாசார விழுமிய பின்பற்றுதல்கள் உள்ளிட்ட பல விடயங்களிலும் பெரும்பான்மை கலாசாரத்தின் கையாளுகையே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்  போக்கு மிகவும் ஆபத்தானதாகும். பெரும்பான்மை இனவாதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடுவதாக இத்தகைய நடவடிக்கைகள் அமைந்து விடுகின்றன. மீன் தானாகவே வந்து வலையில் மாட்டிக் கொள்வதற்கு ஒப்பாக, நாம் நாமாகவே முன்வந்து எமது கலாசார விழுமியங்களை தாரை வார்த்து வருவது புத்திசாலிகளின் செயற்பாடு ஆகாது. எனவே இவ்விடயத்தில் மலையகத்தவர் ஒவ்வொருவரும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு தரப்பினரும் தனது வகிபாகத்தினை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகின்றது.

மலையக மக்கள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சனைகள், இவை தீர்க்கப்படாத நிலையில் தொடரும் இழுபறிகள், இவர்களின் வாழ்க்கை முறை, தொடர்ச்சியான போராட்ட வாழ்க்கை, திருப்தியற்ற வெளிப்பாடுகள் எனப்பலவற்றையும் மையப்படுத்தி நோக்குகையில், இந்நிலைக்கு சாபக்கேடு காரணமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதயம் கனக்கின்றது. எனினும் இவைகளைப் புறந்தள்ளி சோக வரலாற்றை சுகமான வரலாறாக மாற்றியமைக்க வேண்டிய முக்கிய தேவை காணப்படுகின்றது. எமது துன்பங்களுக்கு அடுத்தவரைக் குறை கூறி பயனில்லை.

அரசியல்வாதிகளையும், தொழிற்சங்கவாதிகளையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சமே தவிர உருப்படியான செயற்பாடுகள் இவர்களால் எதுவும் இடம்பெற்றதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் அரசியல் தொழிற்சங்க மாயைகளில் இருந்து விடுபட்டு கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் உருவெடுக்க வேண்டும். இதன் மூலம் விடை கிடைக்காத பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். வீட்டுக்கு ஒருவரெனில் கல்விகற்றால் அந்த விதியொன்றே போதும்; தலைவிதியை மாற்ற என்ற உண்மையை மலையக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.