பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை – சிபோன்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கான எந்த பரிந்துரைகளும் இல்லை என இன்று (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தின் போது பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபொன் மக்டொனாக் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியான தீர்மானம் அது ஏமாற்றம் தருகின்றது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு சிறீலங்காவை பாரப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அதில் இல்லை.

பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவுகள் கிடைக்காது என பிரித்தானியா அரசு தெரிவித்தது ஆச்சரியம் தருகின்றது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய விவாதம் மீண்டும் ஒரு கண்துடைப்பு விவதமாகவே அமைந்துள்ளதாகவும், அதில் பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்களோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ கலந்து கொள்ளவில்லை எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தீர்மானத்தை திருத்துவதற்கான கால எல்லை நிறைவுபெற்ற பின்னர் இடம்பெற்ற இந்த விவாதம் என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒழுங்குசெய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவானது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.