Tamil News
Home செய்திகள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி கையெழுத்து பெற நடவடிக்கை: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி கையெழுத்து பெற நடவடிக்கை: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

“பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நடவடிக்கை வவுனியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக” சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பைச் சேர்ந்த க.அருந்தவராசா (மேழிக்குமரன்) தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும் வவுனியா மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம் என்ற அடிப்படையில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சேதனை பசளையூடாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கூறி ஒட்டுமொத்தமாக உரங்களை நிறுத்தி வைத்திருந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து வரியைக் குறைக்கின்றோம் எனக் கூறி முன்னெடுத்த நடவடிக்கை திறைசேரியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாதிப்படைந்துள்ளார்கள். வவுனியாவில் கல்வி சமூகமும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வைத்தியசாலைகளில் முக்கிய மருந்துகள் இல்லாமையால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுடன் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் தொடர்பில் மக்கள் மிகப் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரம் மக்களை இலக்காக கொண்டு அவர்களின் எதிர்ப்பை பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அணிதிரள செய்து கையெழுத்து வாங்கும் நடவடிக்கையை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம். புதன்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா இலுப்பையடியில் அந்த நிகழ்வு ஆரம்பமாகும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version