பேரணியில் பங்கேற்றோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களாலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களினால், பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பேரணிக்கு தடை கோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்குக்கு நீதி மன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தே இந்த ‘பி’ அறிக்கைகள் பேரணியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த ‘பி’ அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நேற்றுத் திறந்த மன்றில் அழைக்கப்பட்டன. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்று வழக்குகளை எதிர்வரும் மார்ச் 29, மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளுக்கு தவணையிட்டது.