Home செய்திகள் பெப்ரவரி 19 இல் தமிழரசின் மாநாடு நடைபெறும்- பொதுச்செயலாளர் பதவி முதல் வருடம் குகதாசனுக்கு

பெப்ரவரி 19 இல் தமிழரசின் மாநாடு நடைபெறும்- பொதுச்செயலாளர் பதவி முதல் வருடம் குகதாசனுக்கு

சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

அதன்போது, இறுதியாக திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

kuhathasan பெப்ரவரி 19 இல் தமிழரசின் மாநாடு நடைபெறும்- பொதுச்செயலாளர் பதவி முதல் வருடம் குகதாசனுக்கு
குகதாசன்

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்குத் தீர்வு கிட்டியது எனவும், தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியைப் பங்கிட இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் எனவும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் உட்பட நிர்வாகத் தெரிவு மத்திய குழுவில் இறுதி செய்யப்பட்டு பொதுச் சபையில் விடப்பட்ட வேளை பொதுச்செயலாளர் பதவியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பின் பின்னர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

சிறீநேசன்

இதற்குத் தீர்வு எட்டும் வகையில் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வவுனியாவில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.

நீண்ட நேரம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசன் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனுக்குத் தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியை வழங்கவும், அதன்படி முதலாவது வருடத்தை குகதாசனுக்கு வழங்குவது எனவும், இரண்டாவது வருடத்தை ஸ்ரீநேசனுக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

Exit mobile version