புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் தமிழ்நாட்டிற்கு கொரோனா நிதியுதவி

மிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூபாய் ஆறு இலட்சம் (ரூ.6,00,000/-) நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த உதவியை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர் கவிபாஸ்கர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நேரில் வழங்கினார். 

தமிழ்நாட்டில் கொரோனா பெருந் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ‘தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதியகத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இதனை அறிந்து, கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு 2009 ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையிலிருந்து தப்பி  இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் தமது சிறு சேமிப்புத் தொகையான ரூ. 6,00,000/- (ஆறு இலட்சம்) ரூபாயை தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் சார்பில் ரூபாய் ஆறு இலட்சத்தை (ரூ.6,00,000/-) திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர்.