புலம்பெயர் அமைப்புக்களுக்கான அழைப்பு வெற்றுப் பேச்சு மட்டுமே; சபையில் கஜேந்திரகுமார்

gajen.600 300 புலம்பெயர் அமைப்புக்களுக்கான அழைப்பு வெற்றுப் பேச்சு மட்டுமே; சபையில் கஜேந்திரகுமார்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான தமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்துவிட்டு, தற்போது உள்ளக பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஐ.நா.வில் வைத்து ஜனாதிபதி அழைப்பு விடுப்பது வெற்றுப் பேச்சு மட்டுமே என்று என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் பேசுகையில்,

கடந்த 19 ஆம் திகதி நியூயோர்க் நகரில், ஐ.நா. செயலாளரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ சந்தித்த போது, உள்ளக பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிதுகாலத்தில், பல எண்ணிக்கையிலான புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது. இவ்வாறாக தடை செய்துவிட்டு ஐ.நா.வுக்கு செல்லும் போது இவ்வாறு கூறுகின்றனர். இது முழுமையான வெற்றுப் பேச்சே.

இதேவேளை காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதற்காக நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியானால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை ஜனாதிபதி வழங்க வேண்டும். அதேபோன்று ஆட்சிக்கு வந்த பின்னர் பல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாக கூறியுள்ளார். தண்டனைக் காலம் முடிவடையவுள்ளவர்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறான அறிவித்தல்கள் சர்வதேசத்திற்கு ஜனாதிபதி வழங்கும் வெற்றுப் பேச்சுகளாகவே இருக்கும் என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021