புனித திருவிழாவின் போது கொரோனா தொடர்பில் கூடுதல் அவதானம்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து தண்ணீர் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா(கொவிட் 19) வைரஸ் தொடர்பாகவும் இதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. பக்தர்கள் புறப்படும் இடத்திலும் திரும்பி வரும் பொழுதும் கொரோனா வைரஸ் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

கச்சதீவு புனித தேவாலய ஆராதனைகள் தொடர்பில் வடக்கு செயலகம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கடற்படை கொண்டுள்ள கப்பல் மற்றும் படகுகளை இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.