புதுக்குடியிருப்பில் அரச காடு அழிப்பு 8 பேர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரசகாடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 8 பேர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திம்பிலி குளத்திற்கு சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப்பகுதிகள் கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோம்பாவில் கிராம சேவையாளரினால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்களின் பெயர்களுடன் புதுக்குடியிருப்பு  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திம்பிலி குளத்தின் கமக்கார அமைப்பினர் மற்றும் புதுக்குடியிருப்பு கமநலசேவைகள் திணைக்களத்தினரும் தமது பதிவில் உள்ள குளத்தின் காணி அபகரிக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இந் நிலையில் இவ்வாறு காணிஅபகரிப்பினை மேற்கொண்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு  காவல்துறையினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கைதுசெய்துளனர். மேலும் அவர்களை   முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.