Tamil News
Home உலகச் செய்திகள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தமும் நிராகரிப்பு

புதிய பிரெக்சிட் ஒப்பந்தமும் நிராகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது.

இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேச்சு நடந்தினார்.

அதையடுத்து புதிய ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.

ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பிரிட்டன் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூட்டப்பட்டது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதே நேரத்தில் புதிய பிரக்சிட் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், ஒப்பந்த காலக்கெடுவை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற முக்கிய திருத்த தீர்மானத்தை பழமைவாத கட்சி எம்.பி ஆலிவர் லெட்வின் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால், இதை ஏற்க பிரதமர் போரிஸ் மறுத்து விட்டார். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ‘‘பிரக்சிட் ஒப்பந்தம் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நான் இனி பேசமாட்டேன்’’ என உறுதிப்பட கூறினார். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற 320 எம்.பிக்களின் ஆதரவு தேவை.

ஆனால் எத்தனை பேர் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பர் என தெரியவில்லை. அயர்லாந்துடன் சுங்க நடைமுறைகள் மற்றும் சோதனை முறைகள் தங்கள் கொள்கைக்கு எதிரானது என்பதால், இந்த புதிய ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வடக்கு அயர்லாந்து ஜனநாயக ஒன்றியன் கட்சி மறுத்துள்ளது.

Exit mobile version