Tamil News
Home செய்திகள் புதிய நல்லிணங்க ஆணைக்குழுவை ஏற்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

புதிய நல்லிணங்க ஆணைக்குழுவை ஏற்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம். இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348 /48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், பெற்றோலிய உற்பத்திப்பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்
கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

“நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வெளிவிவகார அமைச்சர் எடுக்கும் முயற்சி சரியாக இருக்குமா என்ற விடயம் ஒருபுறம் இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சண்டையிட்ட தரப்பே அது தொடர்பிலான விசாரணைகள் நடத்துவதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சர்வதேச கண்காணிப் போடு இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும். இதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கின்றோம்.

அதனை அமைச்சர் கவனத்தில் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நியாயம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பு இருக்க வேண்டும். அப்படி இருக்கின்றபோதுதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். கடந்த காலங்களில் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்படட நிலையில் அவற்றை நம்பி எமது மக்கள் கருத்துக்களை சொன்னார்கள். இரகசியங்களை சொன்னார்கள்.

இப்போது மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம். இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி
எழுகின்றது. இந்த ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை என்றால் இது கானல் நீராகவே இருக்கும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கவே இருக்காது” என்றார்.

Exit mobile version