பிறப்புச் சான்றிதழில் இருந்து ”இனம்” நீக்கம்

பிறப்புச் சான்றிதழில் காணப்படும் ‘பெற்றோர் விவாக நிலை’ மற்றும் ‘இனம்’ ஆகிய விடயங்களை அகற்றுவதற்கு பதிவாளர் நாயகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாய், தந்தை விவாகம் செய்துகொண்டுள்ளனரா எனும் விடயம் உள்ளடக்கப்படுவதன் காரணமாக, பல சிறார்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்தார்.

மேலும், நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் அவர்கள் இலங்கையர்கள் என்று கூறி வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் சகல பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழில் இலங்கையர் என பதிவு செய்யப்பட்டே வழங்கப்பட் டு வருகின்றன. இந்நிலையில் இனம் தொடர்பில் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதால், இனம் தொடர்பான பகுதி நீக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.