Tamil News
Home செய்திகள் பிரித்தானிய பிரதமரிடம் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை!

பிரித்தானிய பிரதமரிடம் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொது தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தங்களின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னைய பிரதமர் டேவிட் கமரூன் கடைசியாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரைச் சந்திக்கும் அதிர்ஷ்டம் கிட்டியது.

மிக விரைவில் வடக்கு மாகாணத்துக்கு உங்கள் விஜயமும் இடம்பெறுகின்றமையையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். பிரிட்டனில் வாழும் தமிழர்களின் உயர்ந்த நண்பர் நீங்கள் என்பது நாடறிந்த விடயம்.

இலங் கையிலும் பிரிட்டனிலும் உள்ள தமிழர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளமையுடன் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

எங்கள் மக்கள் தங்கள் பாரம் பரிய பூமியில் இடம்பெறும் அரச அடக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களக்குடியேற்றங்கள் போன்றவற்றாலும் அவற்றின் விளைவுகளினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அல்லல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்த்து, மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டும் வரலாற்றுப் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு. பிரிட்டனின் காலனித்துவ நாடாக்கப்பட்டவற்றுள் இலங்கையும் ஒன்று.

1833இல் இங்கு பிரிட்டனால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்களே இலங்கையில் இனப்பூசல்கள் ஏற்படக் காரணம் என்பது பொதுவாக நம்பப் படுகின்றது.

அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும் கிழக்கும், எஞ்சிய சிங்களப் பெரும் பான்மைப் பிரதேசத்துடன் இணைக்கப்படாமல் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்குமானால் இந்த நாட்டின் இனப்பூசல்களை நாம் தவிர்த்திருக்கலாம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்து வதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழர்களின் பாதுகாப்பு நலனைப் பேணுவதற்கு இன்னும் காலம் கடந்துவிட வில்லை.

இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி நடவடிக்கை, மீள் நல்லிணக்கம் ஆகியவற்றைத் தூண்டித் துலங்கச் செய்வதற் கான அவசியத்தை, பிரிட்டனில் உள்ள தமிழ் மக்களுக்குத் தேர்தலுக்கு முன்னரான செய்தியாக நீங்கள் விடுத்தமையை நாம் நினைவு கூரவிரும்புகின்றோம்.

இங்கு இடம்பெற்றவையாகக் கூறப்படும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக முழு அளவிலான சுயாதீன சுதந்திர விசாரணைகளை நடத்துமாறு 2013இல் இலங்கைக்கு விஜயம் செய்த உங்களின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இங்கு இலங்கைக்கு அரசை வலியுறுத்தியமையை நான் இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version