பிரித்தானியாவுக்கான மியான்மர் துாதரகத்தில் இருந்து அந்நாட்டின் துாதர் வெளியேற்றம்

பிரித்தானியாவுக்கான மியான்மர் துாதரகத்தில் இருந்து அந்நாட்டின் துாதர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

க்யாவ் ஸ்வார் மின் என்பவர் பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர். மியான்மர் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியான்மர் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த இராணுவ அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 1-ம் திகதி மியான்மர் இராணுவம், அந்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.  மேலும் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர் க்யாவ் ஸ்வார் மின், ஆங் சான் சூச்சியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

இதையடுத்தே பிரித்தானியாவுக்கான மியான்மர் துாதரகத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மியான்மரில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காகவும் போராடிய மக்கள் மீது    இராணுவம்  நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசி