பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை- டெய்லி மெயில் செய்தி

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டம் குறித்து, செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள டெய்லி மெயில் பத்திரிகை, தடையினை மீளாய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2000ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

மேலும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

daily mail 1 பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை- டெய்லி மெயில் செய்தி

இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது. எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.