பிரித்தானியாவில் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உண்டு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பிரித்தானியாவில் பொதுமக்களை கத்தியால் தாக்கியபோது பிரித்தானியா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்திருந்தனர், அவர்களில் ஒருவர் தற்போதும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் சுரேஸ் மாமூர் பராஸ் அம்மான் எனப்படும் 20 வயது இளைஞர் என்றும் அவருக்கு சிறீலங்காவில் குடும்ப உறவினர்கள் உள்ளனர் எனவும் பிரித்தானியா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஜ.எஸ் எனப்படும் அமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்ட இவர் அந்த அமைப்பின் பிராச்சார ஆவணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 2018 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் இரு தினங்களுக்கு முன்னர் விடுதலையான அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

விடுதலையான அவரை காவல்துறையினர் சாதாரண உடைகளில் பின்தொடர்ந்து சென்றதால் அவர் தாக்குதல் மேற்கொண்ட சமயம் சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் உடனடியாகவே தமது கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தாக்குதலாளி தற்கொலைதாரிகள் அணியும் உடை அணிந்திருந்தபோதும், அது போலியானது என தெரிவிக்கப்படுகின்றது.