Tamil News
Home செய்திகள் பிரதேச செயலாளரின் கருத்துக்கு ஆசிரியர்கள் விசனம்.

பிரதேச செயலாளரின் கருத்துக்கு ஆசிரியர்கள் விசனம்.

வவுனியா பிரதேச செயலாளரின் கருத்தால் வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆசிரியர்கள் விசனத்திற்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டி இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா பிரதேச செயலாளர் வெளியிட்ட கருத்தினாலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் இந் நிலைக்குள்ளாகியுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (05.03) வவுனியா பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் விளையாட்டு ஆசிரியர்கள் விளையாட்டு துறையில் அக்கறை காட்டுவதில்லை எனவும் பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர் உடற்கல்வி ஆசிரியர்களையும், மாணவர்களையும் மைதானத்தில் காணக்கிடைப்பதில்லை என தெரிவித்ததுடன் இதன் காரணமாகவே விளையாட்டு துறை வளர்ச்சி அடையாது காணப்படுவதாகவும் தெரிவித்ததாக விளையாட்டு துறை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் பிரதேச விளையாட்டுப்போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை வைத்தே போட்டிகளை நடத்தும் பிரதேச செயலகங்கள் விளையாட்டுத்துறை ஆசிரியர்களின் உதவியையும் பெறுகின்ற நிலையில் பிரதேச செயலாளரின் கருத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்ததுடன் இனி வருங்காலத்தில் பிரதேச மட்ட போட்டிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,
நான் நேரடியாக அவ்வாறு கூறவில்லை. சிலவேளைகளில் அவர்கள் அவ்வாறு விளங்கிக்கொண்டார்களோ தெரியவில்லை என தெரிவித்தார்.

Exit mobile version