பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு காணமுடியாது – வாசுதேவ

“உயிர்த்த ஞாயிறு தினக்குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முழுமையற்ற அறிக்கையைச் சமரப்பித்துள்ளது. விசாரணை அறிக்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆளும் தரப்பு உறுப்பினர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அறிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தீர்வை முன்வைப்பது அரசின் பொறுப்பாகும். உயிர்த்த ஞாயிறு தினக்குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக் காமல் தீர்வு காண முடியாது. ஆகவே, இந்த விடயம் குறித்து கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறைபாடுகள் குறித்து ஆராய விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதும் அதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிப்பதும் காணக்கூடியதாக உள்ளது.

வாதப்பிரதிவாதங்கள் கூட்டணிக்குள் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தும். இந்த விடயம் குறித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை அனைத்து மக்களும் குறிப்பாக குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைய வேண்டும். அறிக்கையைக் கொண்டு அரசை விமர்சிக்க முடியாது. அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணை அறிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன” என்றார்.