பிரதமர் பதவியைத் துறந்த ரணில் விடுத்த அறிக்கை

இன்று மாலை தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்க  வெளியேறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகலை அடுத்து, 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை கோத்தபயா ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”கடந்த ஐந்து வருட காலத்தில் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான சுதந்திரம், கருத்து வெளியிடல் மற்றும் தகவல் அறியும் உரிமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம்.

அதே போன்று நாட்டை சிறந்த அபிவிருத்திப் பாதையொன்றை நோக்கிச் செலுத்தினோம். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் அனைத்து நிறுவனங்களையும் அரசியல் மயப்படுத்துவதிலிருந்து விடுவித்தோம்.

தற்போது நடந்த ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதாகவும், சுயாதீனமானதாகவும், நியாயமாகவும் நடைபெற்றமைக்கு இதுவொரு முக்கிய காரணமாகும். எம்மால் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்காலம் பதில் சொல்லும்.  நான் நேற்று ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்தேன். பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்து அவருடன் உரையாடினேன்.

பாராளுமன்றத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும், கோத்தபயா ராஜபக்ஸவிற்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை ஏற்றுக் கொண்டு அவருக்கு தேவையானது போன்றதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென நாங்கள் தீர்மானித்தோம்.

நான் ஜனநாயகத்தை விரும்புகின்றேன். அதற்கு மதிப்பளிக்கின்றேன். ஜனநாயக முறைப்படி செயற்படுவேன். எனவே புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளித்து எனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்தேன்.

நான் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் புகழ்ச்சி, பாராட்டுக்களைப் பெற்றது போன்று, பெருமளவான விமர்சனங்களுகு்கும் முகம் கொடுத்தேன்.  நல்லதைப் போன்று கெட்டதையும் கேட்க வேண்டியிருந்தது. என்னைப் பற்றி பாராட்டி, தூற்றி, போற்றி, விமர்சித்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். அத்துடன் எனது சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.