பாரிஸ் புறநகர்ப் குதியில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை – மூவர் கைதாகி காவலில்

பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.

புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.

அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

தமிழர்களான இவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்துவந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்று பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார். இலங்கையரான அவரது விவரங்கள் வெளியாகவில்லை.

கொலை தொடர்பான விசாரணைகளை குசன்வீல் பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.