பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை, பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி  9  மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200க்கு மேற்பட்ட விசைப் படகில் 1500 மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது பாம்பனில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து லிம்ரிட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு  மீதும் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் விசைப்படகு கண்ணாடி சேதமடைந்துள்ளது.   இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பி உள்ளனர். இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் இராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மீன்பிடி தடை காலத்திற்கு பின்பு மூன்றாவது முறையாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக செய்திகளுடன் பேசிய ஆரோக்கியம் என்ற மீனவர், இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம்  முறையிட்டுள்ளதாகவும்   மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளார்.