பாகிஸ்தானில் இந்துக் குடும்பத்தை சேர்ந்த ஐவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை

பாகிஸ்தானில் இந்துக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 5 பேர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலைகள் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரஹிம் யார் கான் நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுதாபி கொலனி என்ற பகுதியிலேயே இக்கொரூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு வசித்து வந்த இந்துக் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இறந்து கிடந்துள்ளனர். ஐந்து பேரையும் கொலை செய்வதற்கு கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராம் சந்த் 35 வயது மதிக்கத்தக்கவர். அபுதாபி கொலனியில் நீண்ட காலமாக வசிக்கும் அவா் அங்கு தையல் தொழில் செய்து வருகிறார். அவர் மிகவும் அமைதியான நபர்.

இந்தக் குடும்பம் இப்பகுதியில் மிக அமைதியாக வாழ்ந்துவந்தது என ரஹீம் யர் கான் நகரைச் சோ்ந்த சமூக ஆர்வலர் பீர்பல் தாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.