பளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள ஏல் ஆர் சி  காணிகளை சட்டவிரோதமாக சிலர் பிடித்து துப்புரவு செய்து வருகின்றமைக்கு பொது மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

பேராலை எனும்  இடத்தில்  உள்ள எல் ஆர் சி காணியினை துப்புரவு செய்கின்ற பணிகளை அவதானித்த பொது மக்கள் 50 இற்கு மேற்பட்டோர் நேற்று சனிக்கிழமை ஒன்று சேர்ந்து  தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு பொலீஸாரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற நிலையில் பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துப்புரவு பணிகளை நிறுத்தியுள்ளனர்

பளை பிரதேசத்தில் பல பொது மக்கள் இன்றும் குடியிருக்க காணியற்று இருக்கின்றனர். பலர் விவசாயம் செய்வதற்கு போதுமான நிலம் இன்றி காணப்படுகின்றனர். இந்த நிலையில் இங்கு எமது கண் முன் உள்ள எல் ஆர் சி காணிகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்து சிலர்  தங்களின் உயர்மட்ட செல்வாக்கினை பயன்படுத்தி 50  ஏக்கர்,100 ஏக்கர் என பிடித்து துப்புரவு செய்கின்றனர்.

ஆனால் காணியற்ற நாம் குறைந்தது  அரை ஏக்கர் காணியினைவது எங்களுக்கு தாருங்கள் என்றே கோருகின்றோம். ஆனால் வறிய இந்த பிரதேசத்தை மக்களுக்கு வழங்காது வெளியிடங்களைச் சேர்ந்த வசதிப்படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த பொது மக்களும், மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் குறித்த இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி  இந்த பிரதேச மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது  தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது எல்ஆர்சி காணிகள் எமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத காரணத்தால் எம்மால் உடனடியாக எவ்வித தீர்மானத்திற்கும் செல்ல முடியாதுள்ளது. இருப்பினும் எல்ஆர் சி ஆணைக்குழுவின் தலைவரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.

உரிய முறைப்படி, நியாயமாக காணிகள் பகிர்ந்தளிப்படவில்லை என்றால் இங்கு குழப்ப நிலை ஏற்படும் எனவும், எனவே உரிய முறைப்படி காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் வரை தற்போது இடம்பெறுகின்ற  செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் தெரியப்படுத்தியிருகின்றேன். அவர் எழுத்து மூலம் இதனை கோரியிருகின்றார். அதனை நாம் விரைவில் வழங்குவோம். அத்தோடு, சிரேஸ்ட பொலீஸ் அத்திட்சருக்கும் தற்போது இடம்பெறும் காணிகள் துப்புரவு  செய்யும் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  கூறியிருகின்றேன் என்றார்.